சவுதி அரேபியா மீதான கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாக இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.
ஹார்முஸ் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் மேற்கொள்ளும் முயற்சிக்கு இணையாக, செங்கடல் பகுதியில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மீது இரண்டாவது முக்கிய முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் புதன்கிழமை (22) தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து 12 ஆவது இரவாக நீடித்தன.
ஹார்முஸ் நீரிணைக்கு அரேபிய தீபகற்பத்தின் மறுமுனையில் அமைந்துள்ள பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள யேமன் நாட்டுத் தீவிரவாதிகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்தனர்.
இது ஈரானின் செல்வாக்கை அல்லது பேரம் பேசும் திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல்கள் எழுவதற்கு முன்பே, ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஏறக்குறைய முழுமையாக முடக்கியது
உலகெங்கிலும் பணவீக்கத்தை அதிகரித்தது.
இது மசகு எண்ணெய் விலையை உயர்த்தியதோடு, அமெரிக்காவில் பெட்ரோல் நுகர்வோர் மீதும் கடும் சுமையை ஏற்படுத்தியது.
எதிர்வரும் நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, செல்வாக்கு இழந்த ஒரு போரினால் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
புதன்கிழமையன்று செங்கடலில் பாப் அல்-மண்டேப் நீரிணையை தவிர்ப்பதற்காக ஐந்து எண்ணெய்க் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன.
மேலும், சீனா மற்றும் இந்தியாவிற்காக சவுதி எண்ணெயை ஏற்றிச் சென்ற மூன்று கப்பல்கள் செவ்வாயன்று திரும்பிச் சென்றன.
பின்னர், செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய்க் கப்பல்கள் மீது தங்கள் படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஹவுத்திகள் கூறினர்.
அவை என்செலியா மற்றும் லைலா என அடையாளம் காணப்பட்டன.
புதன்கிழமை பிற்பகுதியில் செங்கடலில் உள்ள சவுதி துறைமுகமான ஜிசான் அருகே ஏவுகணையால் தாக்கப்பட்டதாக என்செலியா கப்பல் ஒரு ஆபத்து அழைப்பை அனுப்பியதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது.
சவுதி அரேபியாவின் அல் ஷுகைக்கிலிருந்து சுமார் 70 கடல் மைல் தென்மேற்கே, சவுதி கொடியுடன் கூடிய அந்தக் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருளால் தாக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் இடர் மேலாண்மைக் குழுவான வான்கார்ட் கூறியது.
லைலா கப்பல் மீதான தாக்குதல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹார்முஸ் நீரிணையைத் தவிர்ப்பதற்காக, சவுதி அரேபியாவின் தினசரி பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் அந்நாட்டின் செங்கடல் துறைமுகமான யான்புவை (Yanbu) நோக்கி அனுப்பப்பட்டு வருகிறது.
செங்கடலின் தெற்குப் பகுதி நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டால், சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் வடக்கு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இது பயண நேரத்தையும் செலவையும் பல வாரங்கள் மற்றும் கூடுதல் தொகையால் அதிகரிக்கும்.
மேலும், சவுதி அரேபியாவுக்கு எதிராகக் கடல்வழி முற்றுகையை அமுல்படுத்துவதாக ஹவுத்திகள் விடுத்துள்ள அச்சுறுத்தல், போரை கணிசமாக விரிவுபடுத்தவும், அமெரிக்க இராணுவத்தின் மீது கடும் சுமையை ஏற்படுத்தவும் கூடும் என்று தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.














