இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் குழுமம் ஒரு புதிய விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இந்த நடவடிக்கை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் போட்டியை மறுவடிவமைக்கக்கூடும் என்றும் இவ்விவகாரம் குறித்து நேரடியாக அறிந்த இரண்டு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மும்பையில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் எட்டு விமான நிலையங்களை நிர்வகித்து வரும் மற்றும் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுள்ள இந்த ‘துறைமுகங்கள் முதல் சிமெண்ட் வரை’ பல்வேறு துறைகளில் செயல்படும் அதானி குழுமம், விமானப் போக்குவரத்துத் துறையில் நுழையப் போவதில்லை என்று முன்பு கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஊடகங்களிடம் பேசுவதற்கு அனுமதி இல்லாததால் தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அந்த இரு தகவல் மூலங்களில் ஒருவர் கூறுகையில், இது இலாபம் ஈட்டுவது கடினமான மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஒரு வணிகமாகக் கருதப்படுவதால், இது குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அக்குழு இன்னும் இந்த திடத்தை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த கோரமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மீது வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் சந்தையில் முன்னணியில் உள்ள இண்டிகோவின் செயல்பாட்டுச் சிக்கல்களால் 2025 டிசம்பரில் பரவலான விமானப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதன் காரணமாக, அதானி உள்ளிட்ட வணிகக் குழுக்களை ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இந்திய அரசு தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
எவ்வாறெனினும், விமான சேவை நிறுவனம் தொடர்பான அதன் உள்கட்ட விவாதங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன; இது குறித்த முடிவை எடுப்பதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
சுமார் 89 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர சொத்து மதிப்புடன் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி திகழ்கிறார்.
இருப்பினும், விமானப் போக்குவரத்துத் துறையில் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்த முயற்சி, அவரது சிறப்பான தொழில் வாழ்க்கையிலேயே மிகத் துணிச்சலான நடவடிக்கைகளில் ஒன்றாக அமையும்.
அதிக வரிகள், கடும் போட்டி மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் கிங்ஃபிஷர் (Kingfisher), ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) மற்றும் கோ ஃபர்ஸ்ட் (Go First) ஆகிய இந்திய விமான நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டன.
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற துறைகளில் அதானி வேகமாகத் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வந்தாலும், சூரிய ஆற்றல் திட்டத்தைப் பெறுவதற்காக இலஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
எனினும், அமெரிக்க அதிகாரிகள் அக்குற்றச்சாட்டுகளைக் கைவிட முடிவு செய்துள்ளதால் அவருக்கு அண்மையில் நிம்மதி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















