பிரித்தானியாவின் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான அந்தோனி ஜோஷுவா, அல்பேனிய வீரர் கிறிஸ்டியன் பிரெங்காவை எதிர்த்து நடைபெற்ற மீள்வருகைப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே நாக்அவுட் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டி, ஜோஷுவாவின் மீள்வருகைப் போட்டியாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் முன்னாள் உலக சாம்பியன் டைசன் ஃப்யூரியுடன் நடைபெறவுள்ள எதிர்பார்க்கப்படும் மாபெரும் மோதலுக்கான முன்னோட்டமாகவும் அமைந்தது.
போட்டியின் முதல் சுற்றில் பிரெங்கா ஆதிக்கம் செலுத்தினார். போட்டி தொடங்கிய முதல் 20 விநாடிகளிலேயே சக்திவாய்ந்த அப்பர்கட் குத்தால் ஜோஷுவாவை தரையில் சாய்த்தார். முதல் சுற்று முடிவடைவதற்கு முன்பும் ஜோஷுவா மீண்டும் ஒருமுறை கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும், தனது அனுபவத்தை வெளிப்படுத்திய ஜோஷுவா, இரண்டாவது சுற்றில் தாக்குதலை தீவிரப்படுத்தினார். துல்லியமான ஜாப் குத்தால் பிரெங்காவை தடுமாறச் செய்த அவர், பின்னர் கயிற்றோரமாக தொடர்ச்சியான ஹுக் குத்துகளைப் பதித்து எதிராளியை நாக்அவுட் செய்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு நைஜீரியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவரை இழந்த பின்னர் ஜோஷுவா களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும். இந்த வெற்றி, டைசன் ஃப்யூரியுடன் நடைபெறவுள்ள கனவுப் போட்டிக்கான அவரது தயாரிப்பு சிறப்பாக இருப்பதை வெளிப்படுத்துவதாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
















