பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது.
அவருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் ஆஜராகாதிருந்த நிலையிலும், அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
இதனடிப்படையில், கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.














