பேராதனை போதனா வைத்தியசாலையின் உணவுக் கொள்வனவு டெண்டர் தொடர்பாக ரூ. 20 லட்சம் லஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஒருவர் உட்பட இருவரை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2027ஆம் ஆண்டிற்காக பேராதனை போதனா வைத்தியசாலையின் சமையலறைக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான டெண்டர் விண்ணப்பக் கோரலின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமா ஆகியோரின் பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை வாபஸ் பெற்று, முறைப்பாட்டாளருக்குப் போட்டியின்றி டெண்டர் கிடைப்பதற்கு வழிசெய்வதாகக் கூறி சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.
பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அந்தத் தொகை ரூ. 25 லட்சமாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ. 20 லட்சமாக உடன்பாடு எட்டப்பட்டது.
ஒப்பந்தப்படி ரூ. 20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது, கம்பளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவருக்கு உதவிய நபர் ஆகிய இருவரையும் கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் வச்சு நேற்றைய தினம் (27) லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொறி வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
















