பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஏ. தர்ஷினி உத்தரவிட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.

















