ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், “இடையூடாட்டத் தளம்”அல்லது “மேடை ” தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் அவர்கள் முதலில் அரசுத் தலைவர் அனுரவை சந்தித்தார்கள்.அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர். அதன்பின் அடுத்த நாள் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர்.என்றிவ்வாறாக பல்வேறு தரப்பினர்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.
மேலும் தமிழகத்திற்கும் அவர்கள் செல்ல இருப்பதாக அந்த ஆறு கட்சி தலைவர்களில் ஒருவராகிய ரபூப் ஹக்கீம்,அண்மையில் தமிழகத்துக்குச் சென்றபோது திருச்சி விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கூறியிருக்கிறார்.
கடந்த புதன்கிழமை நாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலரையும் 6 கட்சிகளின் கூட்டாகச் சந்திப்பதற்கு அவர்கள் முயற்சித்ததாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு.எனினும் இந்திய வெளியுறவுச் செயலர் எல்லாத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றாகச் சந்தித்திருக்கிறார். ஆறு கட்சிகளின் கூட்டை அவர் சந்தித்து இருந்திருந்தால் அது அந்த கூட்டுக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக இருந்திருக்கும்.
கடந்த வாரம் முழுவதும் அவர்கள் முன்னெடுத்த சந்திப்புகள் அவர்களுடைய அரசியல் முக்கியத்துவத்தைப் பலப்படுத்தும் நோக்கிலானவை.அது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தமிழ் பேசும் சமூகங்களின் பொதுவான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான ஒரு மேடை என்றும் அதை அவர்கள் அழைக்கிறார்கள்.தேர்தல் கூட்டாக அவர்கள் செயல்படுவதில் சவால்கள் உண்டு.ஏனென்றால் அரசியல் இலக்குகளைப் பொறுத்தவரை அவர்களுடைய எல்லா அரசியல் இலக்குகளும் ஒரு புள்ளியில் சந்திப்பவை அல்ல.சந்திக்கக்கூடிய அரசியல் இலக்குகளின் அடிப்படையில் அவர்கள் அந்த மேடையில் அமர்ந்து உரையாடலாம்.
இவ்வாறு ஆறு கட்சிகளின் கூட்டானது கடந்த வாரம் முன்னெடுத்த சந்திப்புகளில் முதலாவதாக ஜனாதிபதியை சந்தித்தபோது அவர்கள் தங்களுடைய மூன்று பிரதான கோரிக்கைகளை அவரிடம் முன் வைத்திருக்கிறார்கள்.அதேசமயம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்தித்தபோது அவர்களுடைய மூன்று கோரிக்கைகளில் ஒன்று ஆகிய மாகாண சபை தேர்தல்களை வேகமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தூதரகத்துக்கு விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கலாம்.கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலரும் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.மாகாண சபை தேர்தலை ஆகக்கூடிய விரைவாக நடத்துமாறு.
அதேசமயம் அந்தக் கூட்டின் முதலாவது கோரிக்கை ஆகிய ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் இந்தியா அதிகம் கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை.ஒரு புதிய யாப்பை உருவாக்கினால் 13ஆவது திருத்தம் இல்லாமல் போய்விடும்.
13வது திருத்தம் என்பது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சி இருக்கும் ஒரே பகுதி. இந்திய இலங்கை உடன்படிக்கை என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலானது.இரண்டு நாட்டின் தலைவர்களால் எழுதிக் கொள்ளப்பட்ட அனைத்துலக அங்கீகாரம் உள்ள உடன்படிக்கை. ஆனால் அந்த உடன்படிக்கை எழுதும்போது இருந்த பிராந்திய யதார்த்தம் இப்பொழுது இல்லை;உள்நாட்டு யதார்த்தமும் இப்பொழுது இல்லை.அந்த உடன்படிக்கை இப்பொழுது நடைமுறையில் இல்லை என்றும் சொல்லலாமா?
ஏனென்றால் அந்த உடன்படிக்கையின் இதயமான பகுதி என்று வருணிக்கத்தக்கது,இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதாகும்.இச்சிறிய தீவை இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான சக்திகள் பயன்படுத்துவதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று இந்திய-இலங்கை உடன்படிக்கையின்போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.இந்தக் கடிதங்கள் உடன்படிக்கையின் பின்னிணைப்பாகக் காணப்படுகின்றன.
ஆனால் 2009க்குப் பின்னரான கடந்த 17 ஆண்டுகளிலும் இச்சிறிய தீவினுள் சீனா கால் பதித்து விட்டது.அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா 99 ஆண்டுகளுக்கு அசையாமல் இருக்கும்.அதுபோல கொழும்புத் துறைமுக பட்டினத்திலும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும்.இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் இரண்டு பெரிய துறைமுகங்கள் சீனாவின் செல்வாக்குக்குள் காணப்படுகின்றன.ஆனால் சீனா இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட 400 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு பிராந்தியப் பேரரசு.இந்தியா கிட்டத்தட்ட 38 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு பேரரசு. இப்படிப் பார்த்தால் இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம்.இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா இரண்டு துறைமுகங்களை தன் செல்வாக்குக்குள் வைத்திருக்கிறது.எனவே இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னிணைப்பாக இணைக்கப்பட்ட கடிதங்களில் கூறப்பட்டுள்ளது போல இப்பொழுது உள்நாட்டு யதார்த்தமும் இல்லை;பிராந்திய யதார்த்தமும் இல்லை.
ஆனால் அந்த உடன்படிக்கையின் விளைவாக எழுதப்பட்ட 13ஆவது திருத்தம் இப்பொழுதும் யாப்பில் உள்ளது. அந்த 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தான் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.ஒரு புதிய யாப்பை உருவாக்கினால் 13ஆவது திருத்தம் இருக்காது.பதிலாக இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வைக்கப்படும் ஒரு புதிய தீர்வு இருக்கும்.அதாவது புதிய ஒரு யாப்பை உருவாக்க முயற்சித்தால் 13ஆவது திருத்தம் நீக்கப்பட்டுவிடும்.அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும். அதைவிட முக்கியமாக இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கு இருக்கும் யாப்பு ரீதியான பிடி இல்லாமல் போய்விடும்.
இங்கே யாப்பரீதியான பிடி என்று கூறுவதுகூட சிலசமயம் பொருத்தமற்றதாக இருக்கலாம்.ஏனென்றால் கடந்த 17 ஆண்டுகளிலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கேட்டு இந்தியா இலங்கை மீது எந்தவிதமான நிர்ணயகரமான அழுத்தங்களையும் பிரயோகித்திருக்கவில்லை.2009க்குப் பின்பு 13க்கு எதிரான சத்திகள் பலமாக இல்லை. எனினும் இந்தியா அது தொடர்பில் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு ஐநா தீர்மானத்தின் போதும் இந்தியாவின் பிரதிநிதி ஐநாவில் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசுகிறார்.ஏன் கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலரும் அதைத்தான் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலர் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அதேசமயம் யாப்பில் இருப்பவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.இந்திய இலங்கை உறவுகளில், குறிப்பாக இனப்பிரச்சினை பொறுத்து,இந்தியா யாப்பில் ஏற்கனவே உள்ளவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்பது அதன் பிரயோக அர்த்தத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்து என்பதுதான்.ஒரு நாட்டை நோக்கி அதன் அயல்நாடு உன்னுடைய யாப்பில் இருப்பவற்றை முழுமையாக அமல்படுத்து என்று கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதற்கு இதைவிடக் கூர்மையான உதாரணம் உண்டா?
எனவே ஆறு கட்சிகளின் கூட்டு முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்றாகிய மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற விடயத்தில் இந்தியாவின் அக்கறையும் இருக்கும். அழுத்தம் இருக்குமா தெரியாது. ஆனால் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் இந்தியா அக்கறை காட்டாது. இதுவரையிலும் அக்கறை காட்டவும் இல்லை, சம்பந்தரின் காலத்தில் 2015ல் நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்ட பின், ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது சம்பந்தர் அது தொடர்பாக இந்தியாவுடன் சம்பாஷனைகளில் ஈடுபடவில்லை.ஆனால் யாப்புருவாக்க முயற்சிகள் நெருக்கடிக்குள்ளாகிய போது சம்பந்தர் அப்போது கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவரைச் சந்தித்ததாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகை தெரிவித்தது.சந்திப்பின்போது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியாவின் கருத்துக்களைக் கேட்பதற்கு சம்பந்தர் முயற்சிக்கவில்லை என்பதனை இந்திய தூதுவர் சுட்டிக்காட்டியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்தது.
ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பது இனப்பிரச்சினைக்கு ஒரு புதிய தீர்வைக் கண்டுபிடிப்பது. அதன் பொருள் பழைய தீர்வை அகற்றுவது. பழைய தீர்வு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கைக் குறிக்கும் 13ஆவது திருத்தமாகும். இதுதொடர்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியாவின் கவலைகளைத் தணிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்க முயற்சித்துள்ளார்.ஆனால் நடைமுறையில் ஒரு புதிய யாப்பு என்பது அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது என்பது இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையிட்டை நீக்கும் ஒன்றாக அமையுமா? அதனை 6 கட்சிகளின் கூட்டு வரவேற்குமா? அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை வரவேற்குமா? அல்லது இனப்பிரச்சனைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பை புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக இந்த கூட்டுக்களிடம் ஏதாவது புதிய சிந்தனைகள் உண்டா?













