சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவராயங்கட்டு, அக்கராயங்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சி கொடுக்கவுள்ளது.
இதனிடையே, நாட்டின் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.













