புது டெல்லியில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் இந்தியா 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்கள் குவிக்க உதவிய இடது கை துடுப்பாட்டக்காரரான அபிஷேக்கின் இந்தச் சதம், முழுமையான டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளுக்கு இடையிலான டி20 சர்வதேசப் போட்டிகளில் மிக வேகமாக அடிக்கப்பட்ட சதமாகும்.
மொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடங்கலாக 108 ஓட்டங்களை எடுத்தார்.
அவரது ஆட்டமிழப்புடன் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து இந்திய அணி தடுமாறத் தொடங்கியதால் எதிரணியினர் ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்.
எவ்வாறு எனினும், இலக்கு 222 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட அதனை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தனது முதல் ஓவரிலேயே ரஹ்மானுல்லா குர்பாஸ் (15 ஓட்டங்கள்) மற்றும் செதிகுல்லா அடல் (1 ஓட்டம்) ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்த இழப்புகளிலிருந்து ஆப்கானிஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இறுதியாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், ஆட்டத்தில் தனது மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்ஸை முடித்துவைத்தார்.
இந்தியாவின் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

அபிஷேக் சர்மாவின் சாதனை சதம்
2024-இல் காம்பியாவுக்கு எதிராக சிம்பாப்வேயின் சிக்கந்தர் ரசா 33 பந்துகளில் அடித்த சதம் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியில் நியூசிலாந்தின் ஃபின் ஆலன் அதே எண்ணிக்கையிலான பந்துகளில் அடித்த சதம் ஆகிய சாதனைகளை முறியடித்து, அபிஷேக் தனது மூன்றாவது டி20 சதத்தின் மூலம் தனித்துத் திகழ்ந்தார்.
இதனைவிட வேகமான இரண்டு டி20 சர்வதேச சதங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
அவை ஐசிசி-யின் கீழ்நிலை உறுப்பு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் நிகழ்ந்தவை.
சைப்ரஸ் அணிக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 27 பந்துகளில் சதம் அடித்த எஸ்டோனியாவின் சாஹில் சௌஹான் ஒட்டுமொத்த சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.
அதேவேளையில், 2025-ல் பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி அணிக்காக மொஹமட் ஃபஹத் சதம் அடிக்க 29 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.















