மட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களைப் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.
கனடாவிற்கு அனுப்புவதாகக் கொழும்பிலுள்ள போலி முகவர் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு அவரைக் கடந்த 6 மாதகாலமாக ஏமாற்றி மோசடி செய்து வந்த நிலையில் அந்த போலி முகவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து போலி முகவரை கொழும்பில் வைத்து நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை ஓமான் நாட்டிற்கு வேலை பெற்று தருவதாக ஒருவரிடம் சின்ன ஊறணியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவர் 13 இலச்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய போலி முகவரை கைது செய்தனர்.
இந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக தெரிவித்த நிலையில் அவர்களை தாலா ஒருவருக்கு இரு ஆள் பிணையில் நிபந்தனையில், பிணையில் நீதவான் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















