2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (23) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, ஏழு விக்கெட்டுகளினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல்.தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்ட நான்காவது வெற்றி இதுவாகும்.
அதேநேரம், இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலிலும் அவர்கள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினர்.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதற்கிணங்க, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியானது, பின்னர் கிளாசன் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோரின் நல்லதொரு இணைப்பாட்டத்தினால் மீண்டது.
கிளாசன் 44 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்தார், அபினவ் மனோகர் 37 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியாக ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியகா பெற்றனர்.
பின்னர் 144 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியானது 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
மும்பையின் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா தனது தொடர்ச்சியான இரண்டாவது அரைசதத்தை அடித்து மொத்தமாக 46 பந்துகளில் 70 ஓட்டங்களை எடுத்தாமர்.
மேலும் சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் எடுத்தார்.


















