நாட்டின் பல பகுதிகளில் இன்று விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியா கற்குழி சந்தி விபத்து
கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
வான் எல பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த உளவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கிண்ணியா இடிமனைப் பகுதியைச் சேர்ந்த சாலிகின் முகமது மவுஜூத் என்ற 58 வயதுடைய பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தினை தொடர்ந்து உளவு இயந்திரத்தின் சாரதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் .வான் எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு புனாணை பகுதி விபத்து
மட்டக்களப்பு புனாணை பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழப்பு
இதேவேளை மட்டக்களப்பு புனாணை பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்
கண்டி -கொழும்பு பிரதான வீதியில் விபத்து
கண்டி -கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
இதேவேளை கண்டி -கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி -கொழும்பு பிரதான வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
கொழும்பில் இருந்து பயணித்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
விபத்து காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யக்கல பொலிஸார் மேலதகி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
கிளிநொச்சி பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து
இதேவேளை கிளிநொச்சி பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ 9 வீதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு வானுடன்; மோதியுள்ளது.
குறித்த விபத்து காரணமாக ஏ9 வீதி ஊடான போக்குவரத்தில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தது
விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் நோயாளர்காவு வாகனங்களில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்












