உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் தீர்மானங்களும், நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, சட்டமா அதிபர் பாரீந்த ரணசிங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zenhong உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேல்நீதிமன்றத்தின் மூலத் தோற்றம் மற்றும் கட்டமைப்பை மாற்றாது, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற நீதியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீதியரசர்களுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவண அறை மற்றும் கேட்போர் கூடம் என்பனவும்,
அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா கட்டமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.













