கார்டிஃப் விமான நிலையத்திற்கு (Cardiff Airport) வேல்ஸ் அரசாங்கம் வழங்கத் திட்டமிட்டுள்ள £205.2 மில்லியன் பவுண்ட் மானியத்தை (Subsidy) எதிர்த்து, பிரிஸ்டல் விமான நிலையம் (Bristol Airport) இன்று தீர்ப்பாயத்தில் தனது வாதங்களை முன்வைத்துள்ளது.
பிரிஸ்டல் விமான நிலையத்தின் வழக்கறிஞர்கள், வேல்ஸ் அரசாங்கத்தின் இந்த மானிய அளவு பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும், இது வணிகப் போட்டி விதிகளை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2013-ஆம் ஆண்டு முதல் வேல்ஸ் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கார்டிஃப் விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக, 10 ஆண்டு கால முதலீட்டுத் திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தற்காத்துப் பேசியுள்ளது.
இந்த நிலையில் புதிய பராமரிப்பு வசதிகள், விமானங்கள் நிறுத்துமிடம் (Hangars) மற்றும் சரக்கு விமான போக்குவரத்துத் திறனை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுக்காக £205.2 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்படும் (10 ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படும்) என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய விமான போக்குவரத்து மையங்களுடன் புதிய வழித்தடங்களை உருவாக்கி, வேல்ஸின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் என்பதும் இதன் பிரதான நோக்கமாக கருதப்படுகிறது.
இதேவேளை, கடந்த 2025 ஜூலை இல் இந்த மேல்முறையீட்டைத் தாக்கல் செய்த பிரிஸ்டல் விமான நிலையம் ,
இந்த முதலீடு ஒரு பயணிக்கு சுமார் £71.50 மானியம் வழங்குவதற்குச் சமம் எனவும் இது நியாயமற்ற வணிகப் போட்டியாகும் எனவும் இதன் மூலம் பிரிஸ்டல் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் கார்டிஃப் நோக்கி ஈர்க்கப்படலாம் எனவும் தெரிவித்தனர்.
நஷ்டத்தில் இயங்கும் அல்லது திவாலாகும் நிலையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு (ailing or insolvent enterprise) பொதுப்பணத்தை வழங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் சட்டச் சோதனைகளை வேல்ஸ் அரசாங்கம் முறையாகச் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் கார்டிஃப் விமான நிலையத்தின் நீண்டகால செழிப்பு மற்றும் பொருளாதார எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் தங்கள் உரிமையை தற்காத்துப் போராடுவோம் என்று வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேலதிக கருத்துக்களைத் தெரிவிக்க அமைச்சர்கள் மறுத்துவிட்டனர்.
பென் டிட்ஸ்வெல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு இந்த மேல்முறையீட்டை விசாரிக்கிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையின் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














