பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு, தான் இயக்கிய படத்துக்காக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கி இருந்தார்.
அதைத் திருப்பிச் செலுத்த அவர் வழங்கிய காசோலைகள் பணம் இன்றித் திரும்பியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தாக்கல் செய்ததற்காக அவர் ஏற்கெனவே கடந்த 2013ம் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார்.
தற்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை சுமார் 9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், கடனைத் திருப்பித் தராததால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராஜ்பால் யாதவின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்ததால் டெல்லி திகார் சிறையில் அவர் சரணடைந்தார். “என்னிடம் பணம் இல்லை, சினிமாவில் எனக்கு நண்பர்களும் இல்லை” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திரைத்துறையினர் அவருக்கு உதவ வேண்டும் என்று நடிகர் சோனு சூட் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜ்பால் யாதவ் சிறந்த கலைஞர்; தங்கள் படங்களில் நடிக்க அவருக்கு கொடுக்கும் முன் பணம் போல, இப்போது ஒரு தொகையை அவருக்கு வழங்கலாம். அது தர்மம் அல்ல; அது அவருக்கு நாம் அளிக்கும் கவுரவம்” என்று கூறியுள்ளார்.
















