கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார்.
ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.














