மத்திய காசாவின் புரைஜ் (Bureij) அகதி முகாம் மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள அல்-மவாசி (al-Mawasi) ஆகிய இடங்களில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.
நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீடித்த இந்தத் தாக்குதல்களில் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
கான் யூனிஸில் உள்ள அல்-மஸ்லக் சந்திப்பில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நாசர் மருத்துவ வளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இஸ்ரேலிய இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேபோல், மத்திய காசாவில் உள்ள புரைஜ் முகாம் நுழைவாயிலில் இருந்த பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் “இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த முயற்சிகளையும், மத்தியஸ்தர்களின் அர்ப்பணிப்பையும் அப்பட்டமாக அவமதிக்கும் செயல்” என்று சாடியுள்ளார்.
ஒக்டோபர் 10 முதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்தக் காலத்தை இஸ்ரேல் தினசரி மீறி வருவதாகவும், அமைதிப் பேரவையின் (Peace Council) பங்களிப்பை இஸ்ரேல் முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், சர்வதேச உத்தரவாதங்கள் எவ்விதமான நடைமுறை மாற்றத்தையும் களத்தில் ஏற்படுத்தவில்லை என்றும் காசிம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரினால் காசா பகுதி ஏற்கனவே பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், தற்போதைய தாக்குதல்கள் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.













