உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படத்தின் வசூல் யாருமே எதிர்பாராத விதத்தில் அமைந்துள்ளது.
உலகளவில் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். மேலும், வரும் நாட்களில் இதே வசூல் தொடர்ந்தால் கண்டிப்பாக இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமே இப்படம் ஓடிமுடியும் போது, ரூ.15 கோடி வரை பங்குத் தொகையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி உரிமம், தொலைக்காட்சி உரிமம், இசை உரிமம் உள்ளிட்ட அனைத்தையும் விற்றதன் மூலமே படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டது. இதனால் திரையரங்க வசூல் என்பது அதிகப்படியான லாபமாகவே பார்க்கப்படுகிறது.

















