இன்றையதினம் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து சோதனையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்:
“தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஹெரோயின் மற்றும் கொக்கைனின் மொத்த அளவை உறுதிப்படுத்தியுள்ளது. 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கைன் காணப்படுகின்றது. இதன் பெறுமதி 2.08 பில்லியன் ரூபாவாகும். இது ஒரு மிகப்பெரிய அளவாகும். அத்துடன், இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.”












