உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. மோட்டார் வாகன விதிகள் 1998-ல் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய பதிவு மற்றும் உரிமங்களைப் பெற வேண்டும். இவற்றின் கட்டணங்களாக விண்ணப்பத்திற்கு ரூ.5,000, பதிவுக்கு ரூ.25,000 மற்றும் உரிமம் பெற ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமங்களைப் புதுப்பிக்க ரூ.5,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு நிறுவனம் எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் இயக்கலாம். 50 முதல் 100 வாகனங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் ரூ.5 லட்சமாக இருக்கும்.
இதற்காக உ.பி. அரசு போக்குவரத்து கழகம் விரைவில் தனது சொந்த மொபைல் செயலியை உருவாக்க உள்ளது. இந்த செயலியில் அனைத்து நிறுவனங்களின் வாகன தகுதி, காவல் சரிபார்ப்பு, பதிவு மற்றும் பிற முக்கிய தகவல்களை வழங்க உள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு மாநில போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங் கூறுகையில், “உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் இனி உ.பி.யில் பதிவு செய்ய வேண்டும். 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 93-ஐ மத்திய அரசு கடந்த வருடம் திருத்தியது. இதை ஏற்கும் வகையில் உ.பி அரசும் தனது விதிமுறைகளை மாற்றி அமைக்க உள்ளது” என்றார்.
மாநிலங்களில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் இதுவரை ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்தது. தற்போது மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு பிறகு அவை ஒழுங்குப்படுத்தப்படுகிறது. புதிய விதிப்படி வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ, காவல் துறை சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி சோதனைகளையும் உ.பி. அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
















