2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செனகல் அணி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியின் முடிவை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) இரத்து செய்தமையினால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
கடந்த ஜனவரி 18 அன்று ரபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் செனகல், மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தபோது, மேலதிக நேரத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டதை அடுத்து செனகல் வீரர்கள் விளையாட மறுத்ததால், அந்தப் போட்டி முக்கியத்துவம் இழந்தது.
சுமார் 17 நிமிட தாமதத்திற்குப் பின்னர், வீரர்கள் இறுதியில் மைதானத்திற்குத் திரும்பினர்.
பிராஹிம் தியாஸின் பெனால்டி தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, செனகலின் பாபே குயே மேலதிக நேரத்தில் வெற்றி கோலை அடித்தார்.
எனினும், ஆப்பிரிக்க கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பின் மேல்முறையீட்டு வாரியம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த முடிவு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.
மொராக்கோவிற்குச் சாதகமாக 3-0 என்ற கோல் கணக்கில் போட்டி முடிவு பதிவு செய்யப்பட்டதால், செனகல் இறுதிப் போட்டியைத் துறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொராக்கோ கால்பந்து சங்கம் (FRMF) தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முடிவை நியாயமற்றது, முன்னெப்போதும் இல்லாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்ட செனகல் கால்பந்து கூட்டமைப்பு, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.














