ஸ்காட்லாந்தின் ஆர்ட்ரோசன் (Ardrossan) துறைமுகம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் அய்ர்ஷையர் (Ayrshire) பகுதியில் அமைந்துள்ள ஆர்ட்ரோசன் துறைமுகத்தை, ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை (CMAL) முழுமையாகக் கொள்வனவு செய்துள்ளது.
இப்பகுதிக்கென புதிதாக ஓடர் செய்யப்பட்ட ‘கால்மேக்’ (CalMac) ரக படகுகள், தற்போதைய துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்ததே இந்தத் தேசியமயமாக்கலுக்கு முக்கிய காரணமாகும்.
முந்தைய உரிமையாளரான பீல் போர்ட்ஸ் குரூப் (Peel Ports Group) நிறுவனத்திடமிருந்து இது எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு சேவையில் இணைந்த ‘க்ளென் சானோக்ஸ்’ (Glen Sannox) என்ற புதிய படகு 335.9 அடி நீளம் கொண்டது. ஆனால், ஆர்ட்ரோசன் துறைமுகத்தின் பிரதான தளம் 318 அடி நீளம் மட்டுமே கொண்டது.
இதனால், இந்தப் படகை அங்கிருந்து இயக்க முடியாமல் 15 மைல் தொலைவில் உள்ள வேறொரு துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது துறைமுகம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதால், சுமார் £80 மில்லியன் பவுண்ட் முதல் £150 மில்லியன் பவுண்ட் வரையிலான செலவில் இதனை விரிவுபடுத்தி நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செயலாளர் ஃபியோனா ஹிஸ்லோப் (Fiona Hyslop) கூறுகையில், நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் பிராந்தியத்தின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆர்ட்ரோசன் மற்றும் அரான் (Arran) பகுதிகளுக்கு இடையிலான படகுச் சேவை மேலும் பலப்படுத்தப்படும் என்றும், எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு சேவையில் இணையவுள்ள புதிய படகுகளையும் இங்கிருந்தே இயக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, துறைமுகத்தின் பாரிய புனரமைப்புப் பணிகள் தொடங்கும் வரை, தற்போதுள்ள பழைய படகுகளைத் தடையின்றி இயக்குவதற்கான குறுகிய காலச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஸ்காட்லாந்து அரசின் படகுகள் மற்றும் துறைமுகங்கள் முகமை நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மேற்கு கடற்கரையில் 27 துறைமுகங்கள் மற்றும் 37 படகுகள் ஸ்காட்லாந்து அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














