பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை நாளை ( 16) முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முன்னர் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், யோஷித ராஜபக்ச சார்பில் ஆஜரான பிரபல சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் நீதிமன்றத்தில் வலுவான சட்ட வாதமொன்றை முன்வைத்திருந்தார்.
எனினும், இந்த வாதத்திற்குச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
வழக்கில் ஒரேயொரு பிரதிவாதி மாத்திரம் எஞ்சியிருக்கும் பட்சத்திலும், அவருக்கு எதிராக “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டைச் சட்டரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருதரப்பு ஆரம்பகட்ட சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், இந்தச் சட்டப் பிரச்சினைத் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவதற்காக நாளை (16) முழுமையான விசாரணையொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்து உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பு பணமோசடி வழக்குகளில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












