இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான எறிபந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை தேசிய அணியில், வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
ஜூன் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இத்தொடரில், இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் அரிய வாய்ப்பை இவர்கள் பெற்றுள்ளனர்.
எறிபந்து விளையாட்டில் தேசிய மட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம்
வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் தற்போதைய மாணவனான நா. நாவேந்தன் மற்றும் கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவருமான எ. ஜெனிஸ்ரன் ஆகியோர்
இலங்கை அணிக்குள் நுழைந்துள்ளனர் .
வவுனியா மாவட்டத்தின் விளையாட்டு வரலாற்றில், எறிபந்து விளையாட்டுப் பிரிவில் இலங்கை தேசிய அணிக்கு வீரர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
இவர்களின் இந்த தெரிவு வவுனியா மாவட்டத்திற்கும், அவர்கள் கல்வி கற்ற கனகராயன்குளம்மகா வித்தியாலயத்திற்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
இந்த இளம் வீரர்களின் திறமைகளை சிறு வயது முதலே இனங்கண்டு, அவர்களைத் தேசிய மட்டம் வரை வழிநடத்திச் சென்ற திறமையான பயிற்றுவிப்பாளர்களான வி. ஐங்கரதாஸ் மற்றும் சி. சத்தியாராஜ் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் இலங்கைக் கொடியைப் பறக்கவிடச் செல்லும் இந்த இரு வீரர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் கனகராயன்குளம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட விளையாட்டு ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.














