கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற உபகுழு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள், விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
புதிய கல்வி மறுசீரமைப்பிற்கு அமைய, முதலாம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாட்டு நூல்களை அச்சிடுவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவில் வலியுறுத்தப்பட்டது.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மதிப்பீடுகள் மற்றும் பெறுபேறு கணிப்பீடுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச வளவாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையக் கல்வி தொடர்பான ‘தேசிய வழிநடத்தல் குழுவை’ நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,
மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான வழிநடத்தல் குழுக்களை நியமிப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
கலந்துரையாடலில் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












