எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றைய தினத்துக்குள் கவனிக்கப்படும் என்றும், அவை நாளைய தினத்துக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில மாவட்டங்களில் எரிபொருள் நுகர்வு வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பழைய வாகனங்களை வைத்திருந்தும் புதிய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவோர், அத்துடன் பழைய தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட புதிய வாகனங்களைக் கொண்டவர்கள் ஆகியோரை QR குறியீடுகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் முக்கியமாகப் பாதித்துள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.
இந்தப் பிரச்சினைகள் இன்றைய தினத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எனினும், பழைய தொலைபேசி எண்களைக் கொண்ட பழைய வாகனங்களையோ அல்லது புதிய தொலைபேசி எண்களைக் கொண்ட புதிய வாகனங்களையோ பயன்படுத்தும் நபர்களிடையே இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டில் சுமார் 7 மில்லியன் நபர்கள் QR அமைப்பின் கீழ் பதிவு செய்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு ஏறத்தாழ 7.2 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்த அமைப்பின் கீழ் சுமார் 5.5 மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
முந்தைய தரவுத்தளத்தில் இருந்த சுமார் 27 லட்சம் காலாவதியான பதிவுகள் இரண்டு நாட்களில் அகற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சில எரிபொருள் நிலையங்கள் தங்களின் இயல்பான அளவை விட இரண்டரை மடங்கு அதிகமாக விற்பனை செய்வதால், எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகத் திறன்களுக்கு அழுத்தம் ஏற்படுகின்றன.
எனினும், நாளைக்குள் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அமைச்சர், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேவையற்ற அழுத்தத்தைக் கையாள்வதற்காக ஒற்றை-இரட்டை இலக்க எரிபொருள் விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் QR முறை மட்டுமே விநியோகத்தைத் திறமையாகக் கையாளும் திறன் கொண்டது.
மேலும், வாகனப் பதிவு எண் இல்லாத வாகன உரிமையாளர்கள், வருவாய் உரிமம், புகை உமிழ்வுச் சான்றிதழ், வாகனப் பதிவுப் புத்தகம் அல்லது காப்பீட்டுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிப்பதன் மூலம் எரிபொருளைப் பெறலாம்.
ஏனெனில் அவை அனைத்திலும் வாகன எண் உள்ளது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.













