எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்துக் கட்டணங்களை 12.19% அளவுக்கு உயர்த்த வேண்டி ஏற்பட்டது.
இதன் அடிப்படையில், 12.19% கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான போக்குவரத்து அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட இந்தக் கட்டணங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு உட்பட அனைத்து சேவைகளுக்கும் மார்ச் 23 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதற்கு அமைவாக 50 கிலோ கிராம் சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் குறிப்பிட்டுள்ளார்.












