போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் செவ்வாய்க்கிழமை (25) காலை நேர வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 6.6% சரிந்து $97.56 (£72.65) ஆகக் குறைந்தது.
அதேநேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 5.5% க்கும் அதிகமாகச் சரிந்து $87.20 ஆகக் குறைந்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வொஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தரப்பினர் தெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றும் ட்ரம்ப் செவ்வாயன்று கூறினார்.
எனினும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படும் கூற்றுக்கள் “போலிச் செய்திகள்” என தெஹ்ரானில் உள்ள அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார்.
தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, ஈரானியத் தலைவர்கள் தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.
எனினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை ஈரான் மறுத்துள்ளது.
இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாள போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சந்தைகளைக் கையாளும் முயற்சி என்று கூறி தெஹ்ரான் முன்னர் நிராகரித்துள்ளது.
எவ்வாறெனினும், இந்த மோதலானது ஒரு உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது.
இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அண்மைய வாரங்களில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஏனெனில், உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% தினமும் கடந்துசெல்லும் ஒரு குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறம்படத் தடுத்துள்ளது.
இந்த மோதல் உலகளாவிய நிதிச் சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றின் தலைவர்கள், போரின் சாத்தியமான விளைவுகள் குறித்து அண்மைய நாட்களில் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.












