கொழும்பின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பயணிகளின் நெரிசல்இ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு சீர்கேடு போன்ற பிரச்சினைகள் நிலவிய நிலையில், இந்த பஸ் நிலையம் முழுமையான மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் காத்திருப்பு பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்களை தெளிவாகக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு மேலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக உணவகங்கள்இ ஓய்வு இடங்கள் மற்றும் வணிக நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதுப்பிப்பு திட்டம், கொழும்பு நகரின் போக்குவரத்து முகாமையை மேம்படுத்துவதுடன் நகரின் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் தலைமையில் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய திட்டமாக இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இத் திட்டம் 424 மில்லியன் ரூபாய் நிதி செலவில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ், முதலாவது தளம் பேருந்து தரிப்பிட நிலையமாகவும், இரண்டாவது தளம் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறைகளுக்காகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.
இதேவேளை மத்திய பஸ் தரிப்பிடத்தில் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் அறியும் மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படுகின்றது.ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பஸ் நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் நிலையில், பொதுமக்கள் சுலபமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை பெறுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.














