2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000ஐத் தாண்டியுள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 25 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 708,348 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 139,164 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 74,295 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 63,505 பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 151,693 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் வந்தவர்களில் 39,424 பேர், அதாவது 26%, இந்திய நாட்டவர்கள் ஆவர்.
மேலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 13,967 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 13,272 பேரும், சீனாவிலிருந்து 12,166 பேரும், ஜெர்மனியிலிருந்து 10,523 பேரும் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஒப்பிடுகையில், 2025 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 229,298 ஆகும்.














