ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது.
அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராக உள்ளது.
பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
கடந்த வாரம், மார்ச் 19 அன்று ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது 112 டொலருக்கும் சற்றுக் குறைவாக இருந்தது.
அதேநேரத்தில் முந்தைய அமர்வில் 5.5% விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.86 டொலர் அல்லது 1.87% அதிகரித்து, 101.50 டொலராக இருந்தது.
வார இறுதியில் யேமன் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை இந்த மாதம் 59% உயர்ந்துள்ளது.
இதுவே 1990 வளைகுடாப் போரின்போது காணப்பட்ட ஆதாயங்களை விட மிக அதிகமான, மிகப்பெரிய மாதாந்திர ஏற்றமாகும்.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது.
மோதல் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமையன்று (28), ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்கள் முதல் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
இது அரேபிய தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்ட சவுதி மசகு எண்ணெய் ஏற்றுமதி, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 4.658 மில்லியன் பீப்பாய்களை எட்டியதாக, Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டின.
யான்புவிலிருந்து ஏற்றுமதி தடைபட்டால், சவுதி எண்ணெய் மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் எகிப்தின் சூயஸ்-மத்தியதரைக் கடல் (SUMED) குழாய்வழியை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வார இறுதியில் இப்பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்து, ஓமானின் சலாலா முனையத்தைச் சேதப்படுத்தின.
அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளை நாடிய போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வொஷிங்டன் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இப்பகுதியில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடிய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













