ஈரான் போரினால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில், எரிபொருள் மீதான கலால் வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு நீக்கப்போவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திங்களன்று (30) தெரிவித்தார்.
வரியைப் பாதியாகக் குறைப்பதால், ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 26.3 அவுஸ்திரேலிய சென்ட்கள் குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், அரசாங்கத்திற்கு ஏற்படும் மொத்த செலவு சுமார் 2.55 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக இருக்கும் என்று பிரதமர் மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் திறைசேரியின் அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விநியோகத்தைத் தடை செய்வதற்கு முன்பு, உலகின் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்டது.
ப்ரென்ட் மசகு எண்ணெயின் விலை மார்ச் மாதத்தில் 59 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது வரலாற்றிலேயே மிக செங்குத்தான மாதாந்திர உயர்வாகும்.
மார்ச் 30 அன்று சந்தை திறக்கப்பட்டபோது, ஒரு பீப்பாய் மசகு கச்சா எண்ணெயின் விலை 115.66 அமெரிக்க டொலராக இருந்தது.
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து கான்பெராவால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கைகள் அண்மையதாகும்.
முன்னதாக, உள்நாட்டு இருப்புகளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை விடுவிப்பதாகவும், எரிபொருள் தர நிர்ணயங்களில் தற்காலிகத் தளர்வு அளிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவுஸ்திரேலிய பெட்ரோலிய நிறுவனத்தின் மார்ச் 29 அறிக்கையின்படி, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் ஒரு லிட்டர் டீசலின் சராசரி சில்லறை விலை 3 அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிகமாகவும், பெட்ரோலின் விலை 2.50 அவுஸ்திரேலிய டொலர்களாகவும் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.














