குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 200 பவுண்ட்ஸ்கள் பணத்தை சேமிப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீட்டு எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சியினர் இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சிரமத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக வடகடல் எண்ணெய் துளையிடும் பணிகளை விரிவுபடுத்தவும், தொழிலாளர் கட்சியின் முட்டாள்தனமான பசுமை வரிகளை இரத்து செய்யுமாறும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோச் (kemi badenoch) கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமாகப் பரவிவரும் நெருக்கடியிலிருந்து பிரிட்டிஷ் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான முதன்மைத் திட்டங்களின் மையமாக அவரது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சில வரிகள் இரத்து செய்யப்படும் அல்லது பொது வரிவிதிப்பிலிருந்து நிதியளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது,
இது எரிசக்தி செலவுகளில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், ஜூலை மாதம் கட்டணங்களுக்கான உச்சவரம்பு மீண்டும் நிர்ணயிக்கப்படும்போது, கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.















