தங்கள் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் (Marks & Spencer) நிறுவனம் இங்கிலாந்து அரசாங்கத்தையும், லண்டன் மேயரையும் வலியுறுத்தியுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் வர்த்தக நிலையங்கள் குறிவைக்கப்படுவதால் ஊழியர்கள் பணிக்கு வருவது குறித்து அச்சத்துடன் உள்ளதாகவும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் மச்சின், உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூதுக்கும், லண்டன் மேயர் சாதிக் கானுக்கும் எழுதியுள்ள கடிதங்களில், குற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கும், குற்றவாளிகளையும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களையும் குறிவைப்பதற்கும் பொலிஸாருக்கு மேலதிக வளங்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.
தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் பகுதியில் கடந்த வார இறுதியில் பல நூறு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார் அங்கு சென்றனர்.
இதன்போது, அவர்களில் பலர் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இவ்வாறான தொடர் திருட்டு சம்பவங்களின் பின்னணியில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் இந்த கோரிக்கை வந்துள்ளது.












