கிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈஸ்டர் தினம், உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறை ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈஸ்டர் திருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்று கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மரணத்தின் பின்னர் உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி யாதெனில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் வெற்றியடைய முடியும் என்பதாகும்.
நமது வாழ்விலும் பல்வேறு சவால்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் ஏற்படுவது இயல்பானதே. இருப்பினும், எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானதல்ல என்பதையும், ஒவ்வொரு சவாலுக்குப் பின்னாலும் நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதையும் ஈஸ்டர் செய்தி எமக்கு நினைவூட்டுகின்றது. வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் இது எம்மை ஊக்குவிக்கின்றது.
ஈஸ்டர் தினக் கொண்டாட்டங்களை நாம் வெகு விமர்சையாக முன்னெடுத்த போதிலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வும் மேலோங்கிய, போர் அச்சம் நீங்கிய அமைதியானதொரு உலகம் உதயமாக வேண்டும் என இந்தப் புனிதமான ஈஸ்டர் நாளில் நான் பிரார்த்திக்கின்றேன்.
கிறிஸ்து பெருமான் போதித்த அன்பு மற்றும் அமைதி ஆகிய பண்புகளை முன்னிலைப்படுத்தி, எமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னதப் பண்புகளால் போஷித்துக்கொள்வோமாக. அனைத்துப் பேதங்களையும் களைந்து, சகோதரத்துவமும் சமாதானமும் மிக்க ஒரே மனிதக் குடும்பமாக இலங்கையைக் கட்டியெழுப்பக் கைகோத்துக்கொள்வோம் – என்றும் அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறினார்.












