ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 17 அன்று ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று (06) மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவேல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு அறிவிப்பட்டது.
மேலும், அரசுத் தரப்பு சாட்சிகள் இருவர் அதே நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராக பணியாற்றிய போது, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் தார் இடுவதற்கான கொள்முதல் நடவடிக்கையின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதன் மூலம் “ஊழல்” எனும் குற்றத்தைச் செய்ததாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.














