நெதர்லாந்துக்குச் சொந்தமான சுற்றுலா கப்பலில் ‘ஹண்டா’ (Hanta) வைரஸ் பரவியுள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் பரவல் காரணமாகப் பெரும் அவதானத்திற்குள்ளாகியிருந்த ‘MV Hondius’ எனும் சுற்றுலா கப்பலில் இருந்து, பாதிக்கப்பட்ட மூன்று பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் கேப் வெர்டே தீவுகளில் இருந்து புறப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் 56 வயதுடைய பிரித்தானியர், 41 வயதுடைய நெதர்லாந்து ஊழியர் மற்றும் 65 வயதுடைய ஜெர்மனியர் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் விசேட விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் நபரின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனமான ‘Oceanwide Expeditions’ தெரிவித்துள்ளது.
இதேவேளை அர்ஜென்டினாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன் பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேருக்குத் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தென் அமெரிக்காவில் காணப்படும் ‘எண்டீஸ்’ (Andes) வகை ஹண்டா வைரஸ் இவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இது மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு வகையாகும்.
பொதுவாக எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், இந்தக் கப்பலில் மனிதர்களிடையே மிக நெருக்கமான உடல் ரீதியான தொடர்பு காரணமாகப் பரவியிருக்கலாம் எனச் சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இது கொவிட் போல காற்றின் மூலம் வேகமாகப் பரவாது என உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது 146 பேருடன் பயணிக்கும் இந்தக் கப்பல் இன்னும் மூன்று நாட்களில் ஸ்பெயினின் ‘கேனரி’ (Canary) தீவுகளைச் சென்றடையவுள்ளது.
இதற்கு ஸ்பெயின் அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கப்பலில் உள்ள அனைவரும் தற்போது கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கேனரி தீவுகளைச் சென்றடைந்ததும் தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















