அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று பரவியுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற டச்சு நாட்டு சுற்றுலா கப்பலில் ஹான்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அதில் உள்ள எஞ்சிய 22 பிரித்தானியர்களை விசேட விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தொற்றினால் உயிரிழந்த மூன்று பயணிகளில் ஒருவருக்கு ஹான்டா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரித்தானியர்களில் இருவர் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்றாவதாக ஒரு பிரித்தானியர், கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் கப்பல் நின்ற அட்லாண்டிக் பெருங்கடலின் திரிஸ்தான் டா குன்ஹா (Tristan da Cunha) தீவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்தக் கப்பல் நாளையத்தினம் ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் கரைக்கு வந்ததும், ஸ்பானிய அதிகாரிகள் அனைத்து பயணிகளுக்கும் வைரஸ் பரிசோதனை செய்வதுடன் அறிகுறி உள்ளவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்.
அறிகுறி இல்லாதவர்கள் உடனடியாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட விசேட விமானம் (Charter flight) மூலம் அன்றைய தினமே பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்படுவர்.
தற்போது கப்பலில் உள்ள எஞ்சிய பிரித்தானியர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் நாடு திரும்பியதும் 45 நாட்கள் வீடுகளிலோ அல்லது தகுந்த இடங்களிலோ தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், சுய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.














