தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதங்களை வழங்கியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார்.
நேற்று மாலை 7 மணி அளவில் ஆளுநரைச் சந்தித்த விஜய், இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகள் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதங்களை ஒப்படைத்தார்.
அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆகும். அதன்படி, தற்போதைய நிலவரப்படி: மொத்தமாக 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
தவெக (108 – 1 ராஜினாமா):107 உறுப்பினர்கள்.
காங்கிரஸ் ஆதரவு: 05 உறுப்பினர்கள்.
CPI மற்றும் CPIM ஆதரவு: 04 உறுப்பினர்கள் (தலா 2).
மொத்த பலம்: 116 உறுப்பினர்கள்.
இதன் மூலம் பெரும்பான்மையை எட்ட இன்னும் 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே விஜய்க்குத் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தவெக-வுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான தகவலை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முடிவு மிகவும் தீர்மானிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
இது தொடர்பாகத் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த தனது இறுதி முடிவை இன்று அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருமுறை விஜயைச் சந்தித்த ஆளுநர், 118 உறுப்பினர்களின் பட்டியலை முழுமையாகச் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதில் உறுதியாக உள்ளார். எனவே, விசிக-வின் 2 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால் மட்டுமே விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அதிகாரப் போட்டி, இன்று காலை விசிக வெளியிடவுள்ள அறிவிப்போடு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.














