இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) தலைமையிலான தூதுக்குழுவினர், தமது வெற்றிகரமான அரச விஜயத்தை நிறைவு செய்து நேற்று (08) இரவு புறப்பட்டுச் சென்றனர்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கும் டோ லாம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் வியட்நாம் ஜனாதிபதி ஆவார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகரும் வேளையில், இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மூலம், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டது.
இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைத் தேடித்தரும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்ததாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட வியட்நாம் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினரை வழியனுப்புவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் மூலம் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையின் நட்பு வட்டாரம் மேலும் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















