மெட்டா’ நிறுவனத்தின் சமூக வலைதளங்களான, ‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக்’கில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோவை நீக்கியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்களை அனுமதித்தது போன்றவற்றுக்கு, ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை’ என்ற தலைப்பில், பார்லிமென்ட் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில், மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், ‘கூகுள், எக்ஸ், யு டியூப், ஸ்நாப்சாட்’ மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சந்திப்பு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் குறித்து, நிறுவன அதிகாரிகளிடம் குழு விளக்கம் கேட்டது.
மேலும், ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே மெட்டா நிறுவனத்தின் கொள்கை விவகாரங்களுக்கான சர்வதேச அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தனர்.














