மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். எனவே மீன்பிடி அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான முத்துலிங்கம் தலைமையிலான ஊடக மாநாடு இன்று பாலமீன்மடு வில் இடம்பெற்றது இதன்போது ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக சுருக்குவலை பாவித்து சிறிய முரல் மீன் பிடித்து வந்த நிலையில் இதற்கான அனுமதி பத்திரம் வழங்குமாறு மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக நாரா நிறுவனம் கள விஜயத்தை மேற்கொண்டு மீனவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முரல் மீன் பிடிப்பதற்கான சுருக்கு வலை பாவிப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து நாரா நிறுவனம் இதனால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்த பின்னர் சிறிய முரல் பிடிக்க சுருக்கு வலை பாவித்து மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை கடந்த 2025ம் ஆண்டு கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் மீனவர்களுக்கு வழங்கியது
இந்த நிலையில் 2026 ம் ஆண்டிற்கான அனுமதி பத்திரத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். இருந்தபோதும் இந்த அனுமதி பத்திரத்தை புதுப்பிக்காமல் மீனவர்களுக்கு பொய்களை கூறி அச்சுறுத்தி மீண்டும் நாரா நிறுவனம் வந்து பரிசோதனை செய்ய வேண்டும் கடற்படை அதிகாரிகள் வந்து பார்க்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் புதுப்பித்துக் கொடுக்க வேண்டிய அனுமதி பத்திரத்தை புதுப்பித்து கொடுக்காமல் 6 மாதம் வரை வைத்துள்ளனர்.
அதன் பின்னர் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கப்பமாக கடற்றொழில் நீரியவள திணைக்கள உத்தியோகத்தர்கள் கோரியுள்ளதையடுத்து படகு உரிமையாளர்கள் ஏதோ வகையில் இந்த அனுமதியை பெற்றுக்; கொள்வதற்காக 50 ஆயிரம் தர முடியாது என தெரிவிதனர்.
அதன் பின்னர் தமது குடும்பத்தினரது தங்க ஆபரணங்களை ஈடுவைத்து ஒரு படகுக்கு 35 ஆயிரம் ரூபாவை கொடுக்க முன்வந்து ஒரு படகு உரிமையாளர் 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகுகளுக்கான 7 இலட்சம் ரூபாய் பணத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சமாக வழங்கி அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டனர்.
அதேவேளை பணம் இல்லாத மீனவர் ஒருவர் தனது தங்க நகைகளை ஈடுவைத்து இரண்டு படகுகளுக்கான அனுமதி பத்திரத்தை பெறுவதற்காக 70 ஆயிரம் ரூபாவை வழங்கிய போதும் அவருக்கான அனுமதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட அவர் எழுத்து மூலமாக இவ்வாறு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இலஞ்சமாக பணம் வாங்கியதாக எமது மோசடி ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு வழங்கியுள்ளார்.
மீனவர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மீன்பிடி அமைச்சர் மீனவர்களின் நலன் கருதி மீனவர்களிடம் இலஞ்சப் பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு மீனவர்களிடம் இலஞ்மாக வாங்கிய பணத்தை மீனவர்களிடம் மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும் அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில மீனவர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம் கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும். என அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.















