பிரித்தானியாவின் லெய்செஸ்டர்ஷயர் (Leicestershire) பகுதியில் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜோன் சிடெல் (John Siddell – 41) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பொலிஸார் முதலில் விசாரணை நடத்தியபோது, ஜோன் சிடெல்லின் சகோதரரான ஜேம்ஸ் சிடெல் (44), தனது தம்பிக்கு நடக்கவும் பேசவும் முடியாது எனத் தெரிவித்து அதிகாரிகளைத் திசைதிருப்பியுள்ளார்.
இதனால், 2024-ஆம் ஆண்டில் அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், தான் ஊனமுற்றவர் போல நடித்த ஜோன் சிடெல், இரவு நேரங்களில் ஒரு சமூகக் கூடத்தில் (Social Club) சாதாரணமாக நடமாடுவது சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம், 15 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலதிகமாக 2 ஆண்டுகள் கண்காணிப்புக் காலமும் விதிக்கப்பட்டது.
இதேவேளை, தம்பிக்கு உடந்தையாக இருந்து நீதியைத் திசைதிருப்பிய ஜேம்ஸ் சிடெல்லுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.













