ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக மே மாதத்தில் இலங்கை ரூபா பதிவாகியுள்ளதாக புளூம்பேர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கினால் ரூபாயின் பெறுமதிக்கு இந்த கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இலங்கை ரூபாயின் திடீர் வீழ்ச்சிக்கு உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, எதிர்வரும் ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நேரடியாகப் பாதிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதன்படி, 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை 40 ரூபாவாக உயர்த்த வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.














