அடுத்த மாதம் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை (2026) தொடர் ஓர் சுற்றுச்சூழல் பேரழிவு என்று சூழலியல் ஆர்வலர்கள், அமைப்புகள் பேசி வருகின்றன.
இது தொடர்பாக தி கார்டியன் ஊடக நிறுவனம் செய்திக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர், அரசியல் சர்ச்சைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் பெயர் பெறப் போகும் தொடராக மாறியுள்ளது. இந்த தொடரால் வெளியேறும் மொத்த பசுமை இல்ல வாயுவின் (Green House Gases) அளவு முந்தைய உலகக் கோப்பை தொடரின் சராசரியை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆய்வாளர்களின் கணிப்புப்படி, இந்த உலகக் கோப்பை மூலம் சுமார் 9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு (கரியமில வாயு) மற்றும் அதற்குச் சமமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இதில் விமானப் பயணங்களால் மட்டும் சுமார் 7.7 மில்லியன் டன் கார்பன் வெளியேறும் எனக் கூறப்படுகிறது. 2010 முதல் 2022 வரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளுடன் ஒப்பிடும்போது இது நான்கு மடங்கிற்கும் அதிகமாகும். மோசமான சூழலில் விமானப் போக்குவரத்து மூலம் மட்டும் 13.7 மில்லியன் டன் வரை கரியமில வாயு வெளியேறலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
2026 உலகக் கோப்பை தொடரின் 9 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை, 2025-ம் ஆண்டு அமெரிக்கா மட்டும் வெளியிட்ட 5.9 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்துடன் ஒப்பிட்டால் இது குறைவாகத் தோன்றலாம். ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கைகளை “பசுமை பாதுகாப்பு” என்ற பெயரில் நியாயப்படுத்துவது உண்மையில் ‘கிரீன்வாஷிங்’ எனப்படும் போலியான சுற்றுச்சூழல் நடிப்பாகவே பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் பேசிக்கொண்டே, அதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதே இந்த கிரீன்வாஷிங் என விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாவது, ஃபிபா பல ஆண்டுகளாகவே கிரீன்வாஷிங்கின் முகமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய உதாரணமாக 2022 கத்தார் உலகக் கோப்பை குறிப்பிடப்படுகிறது. அப்போது ஃபிபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ, ரசிகர்கள் “பூமிக்காக ஃபிபாவின் பச்சை அட்டையை உயர்த்துங்கள்” என்று வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிருமாறு அழைப்பு விடுத்தார். 2022 உலகக் கோப்பையை “கார்பன் நியூட்ரல்” தொடராக மாற்றுவதே இலக்கு என அவர் கூறியிருந்தார்.
ஆனால், உண்மையில் கத்தார் உலகக் கோப்பை மிகப்பெரிய கார்பன் வெடிகுண்டாகவே இருந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான விமானப் பயணங்கள் இயக்கப்பட்டன. கடல் நீரை குடிநீராக மாற்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உப்பு நீக்க முறைமைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஈடு செய்கிறோம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட கார்பன்-ஆஃப்செட் திட்டங்களும் பெரும்பாலும் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்தது.
போட்டி மைதானங்களுக்கான புல்விதைகள் கூட வட அமெரிக்காவில் இருந்து வெப்பநிலை கட்டுப்பாடு செய்யப்பட்ட விமானங்களில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
2026 உலகக் கோப்பை இதைவிட மோசமானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகரித்து வரும் பசுமைக்குடில் வாயுக்கள் காரணமாக ஏற்படும் வெப்ப அலைகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் பலரின் உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால், இந்த உலகக் கோப்பையை “வரலாற்றிலேயே மிகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டு நிகழ்வு” என்று அறிஞர் டிம் வால்டர்ஸ் விமர்சித்துள்ளார். இது ஃபிபாவின் மனித நேயமற்ற அணுகுமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.














