ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் சங்கமிலியா ஹாலிடேஸ் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதன் நிறுவனர் கே. தினேஷ்குமார் நேற்றைய தினம் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி முழுமையான விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்ட பரதநாட்டிய நடனப் பயிற்சி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உலகளவில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி குறித்துஇ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த கின்னஸ் சாதனைக்கான பதிவுக்கட்டணமாக 5000 அல்லது 6000 ரூபாய் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் உண்மையில் 4100 மாணவர்களிடமிருந்து தலா 4500 ரூபாயே பதிவுக்கட்டணமாகப் பெறப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் எஞ்சிய மாணவர்களிடம் கட்டணம் செலுத்த முடியாத பட்சத்தில், ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் எவ்வித கட்டணமும் இன்றி அவர்கள் சாதனை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிதிகள் அனைத்தும் இலங்கையிலுள்ள சங்கமிலியா நிறுவனத்தின் கணக்கிற்கே பெறப்பட்டதே தவிர, இந்திய நிறுவனத்திற்கோ அல்லது தனிநபர்களுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் இதற்கான வரவு செலவு கணக்குகள் அனைத்தும் முறையாகப் பேணப்பட்டு வருவதோடு, அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிதி உதவியும் கோரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு அரச நிகழ்ச்சி அல்ல, எமது தனியார் அமைப்பின் முயற்சியாகும் என்றும், இதற்கான அனுமதிகளைப் பெற முற்பட்டபோது, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் அவர்கள், இது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனக் கூறி, இதற்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உரிய அனுமதிகளைப் பெற்றுத்தர முழுமையான ஒத்துழைப்பை மட்டுமே வழங்கினார் என்றும் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சான்றிதழில் மாணவர்களின் பெயர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், சாதனை படைத்ததற்கான சான்றிதழ் சங்கமிலியா ஹாலிடேஸ் இலங்கை, சங்கமம் குளோபல் அகாடமி இந்தியா மற்றும் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என்றே கின்னஸ் இணையதளத்தில் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
எனினும், தனிப்பட்ட முறையில் தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அசல் சான்றிதழ் அல்லது மின்-சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், கின்னஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைச் செலுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இது குறித்து ஆரம்பத்திலேயே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்த தூய்மையான கலாச்சார நிகழ்வை, சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி எமது நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதாகவும் இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது குறித்து எமது ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, எமக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக சங்கமம் குளோபல் அகாடமியின் நிறுவனர் கே. தினேஷ்குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.














