அமெரிக்கா தனது சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு (Semiquincentennial) விழாவை கோலாகலமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், கண்காட்சிகள் மற்றும் தேசபற்று நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் பல நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்கு டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore )நினைவிடத்தில் உரையாற்றி, அமெரிக்காவின் வரலாறு, சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார். பின்னர் அங்கு பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேவேளை, வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் டிரம்ப் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் இந்த ஆண்டின் சுதந்திர தின வாணவேடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நிகழ்ச்சியில் 8.5 இலட்சத்திற்கும் அதிகமான பட்டாசு வெடிப்புகள் இடம்பெறவுள்ளன. இதற்காக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனினும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக சில அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிப்புற விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், 250ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அரசியல் கருத்து வேறுபாடுகளும் வெளிப்பட்டுள்ளன. டிரம்ப் ஆதரவு நிகழ்வுகளுக்கு இணையாக, சில சமூக அமைப்புகள் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் குடியுரிமை தொடர்பான மாற்று நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
















