பிரிட்டனில் மீண்டும் கடும் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வெப்ப சுகாதார எச்சரிக்கை (Yellow Heat Health Alert) விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப்ப அலை கடந்த ஜூன் மாதத்தில் பதிவான கடும் வெப்பத்தைப் போல தீவிரமாக இருக்குமா என்பது குறித்து வானிலை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது நிலவும் கணிப்புகளின்படி, வெப்பநிலை உயர்ந்தாலும், ஜூன் மாதத்தில் சில பகுதிகளில் பதிவான உச்ச வெப்பநிலையை இது எட்டாமல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெப்பநிலை உயர்வு காரணமாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் சமூக சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் அருந்தவும், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளை, வயதானவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களின் உடல்நிலையை உறவினர்கள் மற்றும் அயலவர்கள் அவ்வப்போது கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.














