கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது.
ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடும் தட்டுப்பாட்டால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் அந்தத் தீவு நாட்டிற்கு இது ஒரு புதிய பின்னடைவாக அமைந்துள்ளது.
மின் கட்டமைப்பு நிறுவனமான UNE, மருத்துவமனைகள் மற்றும் உணவு உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட சில முக்கிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்கி வருவதாகத் தெரிவித்தது.
இருப்பினும், பிற்பகலுக்குள் தலைநகர் ஹவானாவின் மின் தேவையில் 1 சதவீதத்தை மட்டுமே அதனால் பூர்த்தி செய்ய முடிந்தது.
மின் கட்டமைப்பு முடங்கியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.
பழுதடைந்த மின் கட்டமைப்பு மற்றும் தீவின் எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடையின் காரணமாக, கியூபா பல மாதங்களாக மணிக்கணக்கிலும், அண்மையகாலமாக நாட்கணக்கிலும் நீடிக்கும் மின்வெட்டுகளைச் சந்தித்து வருகிறது.
கரீபியன் பகுதி கோடைக்கால வெப்பத்தில், தொடர் மின்வெட்டுகளால் வேலை செய்யவோ அல்லது நிம்மதியாக உறங்கவோ முடியாமல் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் கியூபா மக்களுக்கு, நாடு தழுவிய இந்த மின்சார முடக்கமும் அதன் சீரமைப்பில் ஏற்படும் தாமதமும் மேலும் ஒரு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.












