நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 28 பேர் உயிரிழந்தமை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று துறைசார்ந்த அமைச்சர் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, “அமைச்சர் வெறுமனே பொறுப்பேற்பதாகக் கூறிவிட்டு தப்பிச் செல்ல முடியாது எனவும் உண்மையான ‘முறைமை மாற்றம்’ என்பது, இத்தகைய பாரிய உயிர் இழப்புகள் நிகழும்போது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதிலேயே அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறைச்சாலை மோதல் மட்டுமன்றி, நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோய், மருந்துத் தட்டுப்பாடு, உர விநியோகத்தில் நிலவும் சீர்குலைவு மற்றும் தவறான நெல் இறக்குமதி கொள்கை ஆகியவற்றிலும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.













